பாவப்பட்ட அது
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
18
comments
Labels: ஈழம், கவிதை, சமூகம், நிகழ்வுகள், வடக்கு வாசல், வல்லினம்
நிச்சயமாக உனதென்றே சொல்
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன
எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
23
comments
Labels: ஈழம், கவிதை, சமூகம், தமிழ் எழுத்தாளர்கள், தினகரன், நிகழ்வுகள், வல்லினம்
பேரன்பின் தேவதை வருகை
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்
மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை
விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை
மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது
ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)
நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
30
comments
Labels: ஈழம், கவிதை, சமூகம், சொல்வனம், நிகழ்வுகள்
அவகாசம்
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்
ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல
கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின
அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்
அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
2
comments
Labels: ஈழம், உன்னதம், உயிர்மை, கவிதை, சமூகம், திண்ணை, நிகழ்வுகள்
மெல்லிசையழிந்த காலம்
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்
கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
உன் பற்றி என்னிலும்
என் பற்றி உன்னிலுமாக
நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
ஆழுறக்கம் தழுவட்டுமென
ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# உயிர்மை
# திண்ணை
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
30
comments
Labels: ஈழம், உயிர் எழுத்து, உயிர்மை, கவிதை, சமூகம், திண்ணை, நிகழ்வுகள்
நினைவின் கணங்கள்
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்
ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்
மேய்ச்சல் நிலத்திலிருந்த
கணங்களனைத்தையும் உன்னிரு
உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி
கீழே சிதறட்டுமென விடுகிறாய்
எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது
மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
29
comments
Labels: ஈழம், உயிர்மை, கவிதை, சமூகம், திண்ணை, நவீன விருட்சம், நிகழ்வுகள்
காவல் நாகம்
இருட்டைப் போல உளவு பார்த்து
அடர் சருகுகள் பேய்களின் காலடியில்
மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று
சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது
இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு
பற்றுறுதியற்று
அழுந்தி வீழ்ந்த கண்ணாடி நேசத்தில்
பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்
ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# திண்ணை இணைய இதழ்
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
15
comments
என்னை ஆளும் விலங்குகள்
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்
பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு
காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
# உயிர்மை
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
44
comments
Labels: உயிர்மை, கவிதை, சமூகம், திண்ணை, நிகழ்வுகள், வார்த்தை
சிதைந்த நாட்களோடு ஓய்தல்
காலத்தின் நோய்ச் சக்கரம்
கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று
நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது
நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது
வேறெதுவும் வேண்டேன்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# ஓவியம் - நஜி அல் அலி (கொலை செய்யப்பட முன்னரான இறுதி ஓவியம்)
# திண்ணை இணைய இதழ்
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
35
comments
கோடை
பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
25
comments












